திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து விசிக சார்பாக சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். மேலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.