
தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் உதகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துணைவேந்தர்கள் மாநாட்டை, தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான வருடாந்திர மாநாடு உதகை ஆளுநர் மாளிகையில் இன்றும் (ஏப்.25), நாளையும் நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டது.
தொடர்ச்சியாக 4-வது வருடமாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பார் என்றும், தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிப்பார் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் தொடங்கவிருந்த துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கோவை வேளாண் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
இதை ஒட்டி, அழைப்பு விடுக்கப்பட்ட 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து தமிழக அரசுக்கு வழங்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதை தொடர்ந்து, அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்.