

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்று கடந்த ஜனவரி 30 அன்று நாடாளுமன்ற மக்களவையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன், “மதுரைக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக பரிசீலனையில் உள்ளது. சென்னை மற்றும் பெங்களூருக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விமான நிறுவனங்களுடன் விவாதிக்கப்பட்டு அவற்றின் செயல்பாட்டுத் திறனின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
சர்வதேச விமான நிலையம் ஆக்க ஒப்புதல்
இதற்கிடையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் மாநிலத்தின் மிகப் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். இது தென் தமிழ்நாட்டிற்கு முக்கியமான நுழைவாயிலாக விளங்குகிறது மற்றும் சுற்றுலா மற்றும் ஆன்மிக யாத்திரையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தூண்டும். இந்த விமான நிலையம் சர்வதேச பயணிகள் மற்றும் வணிகங்களை ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. இது நகரத்தின் வரலாற்று முக்கியத்துவத்துடன் ஒத்துப்போகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மகிழ்ச்சி
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- ”தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க படி. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறிப்பாக தெற்கு தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும். காலத்தால் அழியாத கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்திற்காக கொண்டாடப்படும் மதுரை நகரம், அதன் உலகளாவிய இணைப்பை வலுப்படுத்த உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today has approved declaration of Madurai Airport, Tamil Nadu, as an International Airport.