
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
`சமுதாயத்தை சீரழிக்கும் அனைத்து விதமான குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.
பல வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டான்? பல்கலைக்கழகங்களை உயர் கல்வி பயிலும் பாடசாலைகளாக நடத்துவதற்கு பதில், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக மாற்றி வைத்திருப்பது உலகக் கொடுமைகளின் உச்சம்.
ஒரு ட்வீட் போட்டு கருத்து சொல்லுபவர்களை தேடித் தேடி கைது செய்யும் காவல்துறை ஏற்கனவே பல வழக்கில் தொடர்புடைய ஞானசேகரனை கைது செய்யாதது ஏன்? ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்தவர் என்பதாலா? போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எல்லா கொடுஞ்செயலுக்கும் பின்னால் திமுக நிர்வாகிகள் இருக்கின்றனர்.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து மாநில காவல்துறை விசாரணை போதாது என்று சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டது, சிபிஐ விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டீர்கள், ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக அரசாங்கமே உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதுணையாக இருக்குமானால், பாலியல் குற்றங்கள் புரிபவர்க்கு இந்த அரசின் மீது எப்படி அச்சம் வரும்?
இதுதான் உண்மை என்றால், உங்களிடம் சட்டம் ஒழுங்கைக் காக்கக் கோரி வலியுறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமையினை எளிதில் கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால், அதனை இப்போதே கைவிட்டுவிடுங்கள். மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்; அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுக அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கிக் கைது செய்ததற்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்த திமுக ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனி திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றே தமிழ்நாட்டை காப்பதற்காண ஒரே வழி' என்றார்.