
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் கிழக்கு கடலோரப்பகுதி மாவட்டங்கள் வடகிழக்குப் பருவமழையால் பலனடையும். அதே நேரம் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்தார். மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சொந்தமாக 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையையொட்டியுள்ள பகுதிகளில் மிகக்கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, சென்னைப் பெருநகர மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘1913’ கட்டுப்பாட்டு அறை, வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கான நடவடிக்கைகள், தயார் நிலையில் உள்ள 13000 தன்னார்வலர்கள், அவர்களுக்கும் அரசுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கேட்டறிந்தோம். மேலும் கட்டுபாட்டு அறையில் இருந்து பொதுமக்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.
24 மணி நேரமும் இயங்கக் கூடிய இந்த கட்டுப்பாட்டு அறையில் தினசரி 4 ஷிஃப்ட் அடிப்படையில் 150 பணியாளர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றனர். மேலும், தண்ணீர் தேங்கினால் அதனை வெளியேற்ற 100-க்கும் அதிகமான மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.
மழைநீர் வடிகால் பாதைகளைச் சரிவர மூடி வைப்பது, மின்சார மாற்றிகளை சரியான முறையில் உயரத்தில் தூக்கி நிறுத்துவது போன்ற பணிகள், மழைக்கால தங்குமிடம், உணவு உட்பட அனைத்து நிவாரண வசதிகளும் உடனுக்குடன் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் ஆலோசனைகளை வழங்கினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.