தவெக ஆட்சி சிறுவாணியைப் போல சுத்தமான ஆட்சி: விஜய் வாக்குறுதி

தமிழக வெற்றிக் கழகம் வெறுமன மற்றொரு கட்சி அல்ல, அது...
தவெக ஆட்சி சிறுவாணியைப் போல சுத்தமான ஆட்சி: விஜய் வாக்குறுதி
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறுவாணி தண்ணீரைப் போல சுத்தமான ஆட்சியாக அமையும் என கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் கோவையில் நேற்றும் இன்றும் இருநாள்கள் நடைபெற்றது. கோவை குரும்பப்பாளையத்தில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

முதல் நாளைத் தொடர்ந்து, இன்றும் வாக்குச் சாவடி முகவர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

"இந்தச் சந்திப்பு வெறும் வாக்குக்காக நடத்தப்படுகிற சந்திப்பு அல்ல என்று நேற்று கூறியிருந்தேன். வெறும் அரசியல் ஆதாயத்துக்காகத் தொடங்கப்பட்ட கட்சி தவெக கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், இதனால் மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால் எந்த எல்லைக்குச் செல்லத் தயங்க மாட்டோம்.

நம் ஆட்சி அமைந்ததும் சுத்தமான அரசாக இருக்கும். நம்முடைய ஆட்சியில் ஊழல் இருக்காது, தவறு செய்பவர்கள் இருக்கமாட்டார்கள். எனவே எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நம் வாக்குச் சாவடி முகவர்கள் தைரியமாக மக்களை அணுகுங்கள்.

உங்களுடைய ஊர் சிறுவாணி தண்ணீரைப்போல சுத்தமான ஓர் ஆட்சியாக இது அமையும். இன்னும் வலிமையாகச் சொல்ல வேண்டுமானால், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான நிர்வாகத்தைச் செய்யக்கூடிய ஆட்சியாக இது அமையும். இதை மக்களிடம் கொண்டு எடுத்துக் கூறுங்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம். வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கக் கூடியவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நம் கடமை. நமக்காக குடும்பம் குடும்பமாக வந்து நமக்கு வாக்களிக்கும் மக்கள் அதைக் கொண்டாடமாகச் செய்ய வேண்டும். அப்படி ஒரு மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்துங்கள்.

இதைச் செய்த பிறகு, தமிழக வெற்றிக் கழகம் வெறுமன மற்றொரு கட்சி அல்ல, அது விடுதலைக்கானப் பேரணி என்பதைப் பார்ப்பீர்கள்.

இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்களுடையச் செயல்பாடுகள் தான் மிகமிக முக்கியம். நீங்கள் தான் இதற்கு முதுகெலும்பு. இதை மனதில் வைத்து செயல்படுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்!" என்றார் விஜய்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in