கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது! | TVK Vijay | Karur | Karur Stampede |

பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது! | TVK Vijay | Karur | Karur Stampede |
ANI
1 min read

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13 முதல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரத்தை நடத்தி முடித்துள்ளார்.

கடைசியாக கடந்த சனிக்கிழமை இரவு கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்டநெரிசல் ஏற்பட்டு மயக்கம் மற்றும் மூச்சுத் திணறலால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக இதுவரை மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். பிரசாரத்தை முடித்துக்கொண்டு விஜய் திருச்சி வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயின் கூட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறையிடம் விண்ணப்பித்தது கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன். முதல் தகவல் அறிக்கையில் விஜயின் பெயர் இடம்பெறவில்லை.

கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் விஜய் கைது செய்யப்படுவாரா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார்கள், யார் கைது செய்யப்பட மாட்டார்கள் என நீங்கள் எண்ணத்தோடு கேட்கிறீர்களோ, அதற்கு உட்படுவதற்கு நான் தயாராக இல்லை" என்று பதிலளித்தார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக முதல் கைது நடவடிக்கையாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி ஆதவ் அர்ஜுனா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

Karur | Karur Stampede | TVK Vijay | Vijay | Madhiyazhagan | Mathiyazhagan | TVK District Secretary |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in