
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் விஜய் தலைமையில் வரும் 26, 27-ல் கோவையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.
கோவை குரும்பப்பாளையம் எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் இரண்டாவது நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகள், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து விளக்கவுரை ஆற்ற உள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
புதிதாகத் தொடங்கப்பட்டு களம் கண்டு வருவதால், கட்சியைப் பலப்படுத்த தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொண்டர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்பட்டது. அண்மையில், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களிடம் பதிவு செய்யப்பட்ட காணொளி வாயிலாக விஜய் பேசினார்.