
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவெக தலைவர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவானது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம், வக்ஃபு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டம் இஸ்லாமிய சமூக மக்களுக்கு எதிரானதாகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் எம்.பி.க்கள் முஹமத் ஜாவேத், இம்ரான் பிரதாப்கார்ஹி, திமுக எம்.பி. ஆ. ராசா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனதுல்லா கான், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் மற்றும் அனைத்து இந்திய இஸ்லாமியர் தனி நபர் சட்ட வாரியம் போன்ற அமைப்புகள் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளன.
மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 16-ல் விசாரணை நடத்தவுள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்பு இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டமும் நடத்தப்பட்டது.
விஜய் முன்பு வெளியிட்ட அறிக்கை