கரூர்: எஸ்ஐடி-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு! | Karur Stampede |

அக்டோபர் 10 அன்று கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வேறு சில மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
கரூர்: எஸ்ஐடி-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக மேல்முறையீடு! | Karur Stampede |
1 min read

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதுதொடர்பாக கரூர் நகர காவல் துறையினர் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தது. இவர்களில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சிபிஐ விசாரணை கோரி பாஜக தலைவர் உமா ஆனந்தன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் எம் தண்டபானி மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்து உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை அக்டோபர் 10 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஒப்புக்கொண்டார்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் துயரச் சம்பவம் தொடர்புடைய மனுக்களை நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து நீதிபதி என். செந்தில்குமார் உத்தரவிட்டார். வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிடப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த மனு மீது அக்டோபர் 10 அன்று விசாரணை நடத்தப்படும் எனப் பட்டியலிட்டார். அக்டோபர் 10 அன்று கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வேறு சில மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. கரூர் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் அன்றைய நாளில் தான் விசாரணைக்கு வருகிறது.

Karur Stampede | SIT | Special Investigation Team | Karur | Vijay | TVK Vijay | Supreme Court | Madras High Court |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in