

அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு மழைநீர் தேங்கியிருக்காது என்று தமிழ்நாடு அரசின் மீது தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இது, கடந்த டிசம்பர் 1 முதல் வலுவிழந்து வருகிறது. இதனால் கடந்த மூன்று நாள்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில், வடசென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கியதுடன் குடியிருப்புகளுக்குள் நுழைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேங்கியிருக்கும் மழைநீரை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாடு அரசைக் குற்றம்சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
“சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்றார்.
TVK leader Vijay has accused the Tamil Nadu government saying that if the government had cared about the people, so much rainwater would not have accumulated after such little rain.