
தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் தலைமையில் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் மாநிலச் செயலாளர் சி. விஜயலட்சுமி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிலுள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய/கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியான ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களில் ஒரு பெண் உள்பட தலா 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்குக்காக விஜய் கோவை சென்றிருந்தபோது, தவெக தொண்டர்கள் பலர் தலைக்கவசம் அணியால் அவருடைய வாகனத்தை வேகமாகப் பின்தொடர்ந்து வந்தார்கள். மேலும் சிலர் விஜயின் பிரசார வாகனத்தின் மீது குதித்து விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தினார்கள். இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு விஜய் இன்று காலை தொண்டர்களிடத்தில் வெளிப்படையாக வலியுறுத்தினார்.