
விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு குலத்தொழிலை ஊக்குவிக்கப் பாடுபடுகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையினால் செயல்படுத்தப்படும் `கலைஞர் கைவினைத் திட்டத்தின்’ தொடக்க விழா காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் இன்று (ஏப்.19) நடைபெற்றது. திட்டத்தைத் தொடங்கி வைத்து, இந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`பாஜக அரசு கடந்த 2023-ல் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பெயர் என்ன தெரியுமா? `விஸ்வகர்மா திட்டம்’ 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னார்கள்.
நம்மை பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்துடன் இருக்கவேண்டும். ஆனால், அந்த விஸ்வகர்மா திட்டம் அப்படியான திட்டம் இல்லை. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அந்தத் திட்டத்தின்கீழ் ஒருவர் பயன்பெறவேண்டும் என்றால், அந்த விண்ணப்பதாரர், அவருடைய குடும்பம் காலங்காலமாக செய்துகொண்டு வருகின்ற தொழிலைத்தான் செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.
இது சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிக்கிறது என்று சொல்லி நாம் கடுமையாக எதிர்த்தோம். அதுமட்டுமல்ல, விண்ணப்பித்தவர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை பார்த்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது. மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்கப் பாடுபடுகிறது.
குடும்பத் தொழிலில் பயிற்சி கொடுத்து, அவர்கள் வெளி உலகத்தையே பார்க்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. அதுவும், சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? இதை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?
அதுவும், 1950-களிலேயே குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துக் களம் கண்ட தமிழ்நாடு இதை அனுமதிக்குமா? அந்த உணர்வோடுதான், தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். அதில் நான் குறிப்பிட்டது,
தகுதியான எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாற்றவேண்டும். விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 35-ஆக உயர்த்தவேண்டும். கிராமப்புறங்களில், பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றவேண்டும்.
ஆனால், மிக மிக முக்கியமான இந்த மூன்று மாறுதல்களையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். எந்த திருத்தமும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில் தமிழக அரசு செயல்படுத்தாது என்று மத்தியில் இருக்கக்கூடிய எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகவே இதை நாங்கள் தெரிவித்துவிட்டோம்.
அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக, சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம்.
அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது. ஆனால், கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசுத் திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35-ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். அதனால், கல்லூரிக்கு செல்கின்ற வயதில், குடும்பத் தொழிலை பார்த்தால்போதும் என்று எந்த மாணவரும் நினைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம்.
இந்தத் திட்டத்தில், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்கர்மா திட்டத்தில் மானியம் கிடையாது. இதுவரை 24,907 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8,951 பயனாளிகளுக்கு ரூ. 170 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து கைவினைக் கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யாரையும் விலக்காமல், சமூகப் பாகுபாடு பார்க்காமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமான கைவினைஞர்கள், விரும்பிய தொழிலைச் செய்யலாம் என்கின்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
ஒரு காலத்தில், அப்பா பார்த்த தொழிலைத்தான் பிள்ளையும் பார்க்கவேண்டும் என்று குலத்தொழில் முறை இருந்தது. அந்த அடிப்படையில், தொடக்கத்திலேயே நான் சொன்னது போல, அப்பா தொழிலை மகனுக்குக் கற்றுத் தர குலக்கல்வி முறையை இராஜாஜி ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார்கள்.
இதற்கு எதிராக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடினார்கள். பெருந்தலைவர் காமராசர் அவர்கள்தான் அந்த முறையை திரும்பப் பெற்றார். இத்தனை ஆண்டுகள் ஆகியும், சிலருடைய மனதிலிருந்து அந்த பழமைவாத எண்ணம் இன்னும் போகவில்லை என்பதன் அடையாளம்தான் விஸ்வகர்மா திட்டம்.
அதை எதிர்த்து நம்முடைய திமுக அரசு சமூகநீதித் திட்டமாக, கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதுதான் காலத்தின் வெற்றி’ என்றார்.