
ஏப்ரல் 1 முதல் தமிழகத்தின் 40 சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலாகவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 78 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 12 சுங்கச் சாவடிகள் கடந்த 2 நிதியாண்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்டன. இந்நிலையில், இவற்றில் 40 சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டண உயர்வு அமலாகும் என்று செய்து வெளியாகியுள்ளது. மீதமுள்ள 38 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1-ல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.
குறிப்பாக, சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நல்லூர், அத்துடன் தாம்பரம்-திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆத்தூர், பரனூர் சுங்கச்சாவடிகள் போன்றவற்றில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன
வாகனங்களைப் பொறுத்து, ரூ. 5 முதல் ரூ. 25 வரை இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மொத்த விலை குறீயீட்டின் (wholesale price index) அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008-ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுங்க கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்கள் தொடர்பான புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும், சுங்க உபயோகிப்பாளர்களுக்கான நியாயமான சலுகைகள் கிடைக்க அதில் வழிவகை செய்யப்படும் என்றும் கடந்த மார்ச் 19 அன்று அறிவித்தார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி.