

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் இதனை அமல்படுத்த கோயில் நிர்வாகம் மறுத்தது. இதனால் கார்த்திகைத் திருநாளான நேற்று (டிச. 3) மாலை சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு மலையில் உள்ள தீபத் தூணில் தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
அப்போது, திருப்பரங்குன்றத்தில் கூடியிருந்த இந்து அமைப்பினர் காவல்துறையின் தடுப்புகளை மீறி மலையேற முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். மேலும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று இரு நீதிபதிகள் அமர்வில் தொடங்கியது. அப்போது, “திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு மனுதாரர் தரப்பு கலவரத்தை ஏற்படுத்தினார்கள். காவல்துறையின் தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன, இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளார்கள். தனி நீதிபதி உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கப் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் வீரர்கள் நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ளவர்கள். அவர்களின் அதிகார வரம்பு நீதிமன்றத்துக்குள் மட்டுமே. அவர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு. அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், உத்தரவை நிறைவேற்றப்படாதது ஏன் என்ற விளக்கத்தை மட்டுமே கேட்க முடியும். ஆனால், அவமதிப்பு வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.” என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்? திருப்பரங்குன்றம் கோயிலைவிட தீபத் தூண் பழமை வாய்ந்ததா? என்று கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கலவரத்தை தடுப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.
The Tamil Nadu government has told the Madurai branch of the Madras High Court that the order of the single judge in the Thiruparankundram Deepam case has caused a law and order problem.