
மாநில சுயாட்சி தொடர்புடைய தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் நாளை (ஏப்ரல் 15) முன்மொழியவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த மார்ச் 25 அன்று இருமொழிக் கொள்கை தொடர்புடைய சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதற்குப் பதிலளித்து உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநில சுயாட்சி தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
"மொழித் திணிப்பின் மூலமாக நிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள்.
எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்நிலையில், மாநில சுயாட்சி தொடர்புடைய தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாநில அரசுகளுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டுகளைக் குவித்தது. ஏற்கெனவே, மத்திய அரசு நிதி ஒதுக்குவது இல்லை என்கிற பிரச்னையும் தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழியவுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.