நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்!

"சட்டத்தை யாரும் தங்களுடையக் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது."
நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்!
1 min read

ஜாகிர் உசேன் கொலை வழக்கில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது:

"திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மீதான தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பலர் உரையாற்றியிருக்கிறார்கள். இதில் கீழ்காணும் உறுப்பினர்கள் தங்களுடையக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுக்கும்போது, பெயர்களை எழுதிக்கொடுத்துள்ளார்கள். அவர்களை மட்டும் அனுமதிக்காமல் இதில் இடம்பெறாதவர்களும் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் கடுமையாக இருக்கும்.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம் தைகா தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் என்பவர் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத சில நபர்களால் வழிமறித்து தாக்கியதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜாகிர் உசேனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இவ்வழக்குத் தொடர்பாக இருவர் திருநெல்வேலி குற்றவியல் நடுவர் 4 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், மற்றவர்களைக் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் கடந்த 8.1.25 அன்று தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, மறைந்த ஜாகிர் உசேன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌபிக் என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஒரு பிரச்னை இருந்து வருகிறது. இடப் பிரச்னை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌபிக் மற்றும் அவருடைய மைத்துனர் அக்பர் பாஷா ஆகியோர் ஜாகிர் உசேன் மீதும் ஜாகிர் உசேன், எதிர்த் தரப்பினர் மீதும் மாறி மாறி புகார் மனுக்களை அளித்துள்ளார்கள்.

இவற்றின் மீது காவல் துறையினரால் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜாகிர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் அடிப்படையில் அவரை அச்சுறுத்துவதாக குறிப்பிட்ட எதிர்த் தரப்பினரை மாநகரக் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.

மேற்படி விசாரணை நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய தினம் கண்டிக்கத்தக்க இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இக்கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் அவர்களுடையப் பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டத்தை யாரும் தங்களுடையக் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. இந்தக் கொலை வழக்கில் மட்டுமல்ல எந்தக் குற்றத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in