தமிழகம் கண்ட எளிமையான தலைவர்: அண்ணாவின் நினைவைப் போற்றும் அண்ணாமலை

முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.
தமிழகம் கண்ட எளிமையான தலைவர்: அண்ணாவின் நினைவைப் போற்றும் அண்ணாமலை
படம்: https://twitter.com/EPSTamilNadu
1 min read

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவு நாளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மரியாதை செலுத்தி வருகின்றன. திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை வாலாஜா சாலையிலுள்ள அண்ணா சிலையிலிருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டார்கள். காமராஜர் சாலையிலுள்ள அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயினில் அண்ணாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசுமைவழிச் சாலையிலுள்ள தனது இல்லத்தில் அண்ணாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் நினைவிடத்திலும் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அண்ணாவின் படத்தைப் பகிர்ந்து அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

"தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர், தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர்.

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறேன்."

logo
Kizhakku News
kizhakkunews.in