தி.மலை நிலச்சரிவு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்

நிலச்சரிவில் சிக்கியவர்களில் 7 பேருடைய உடல்களும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
தி.மலை நிலச்சரிவு: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்
படம்: https://x.com/mkstalin
1 min read

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

"திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது 01-12-2024 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் கனமழையின் காரணமாக மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினைத் திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது. இதனையறிந்து மாவட்ட நிர்வாகத்தினரால் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படையின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று 02-12-2024 மாலை 6.30 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் துரதிஷ்டவசமாக அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா (வயது 27), மகன் கௌதம் (வயது-9), மகள் இனியா (வயது-5), பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (வயது-7) மஞ்சுநாதன் என்பவரின் மகள் விநோதினி (வயது-14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா (வயது-7) ஆகிய ஏழு நபர்கள் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கியவர்களில் 7 பேருடைய உடல்களும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in