திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஜான்சிராணி போட்டியிடுவார் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மீதமுள்ள 7 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 33 தொகுதிகளுக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்தார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டார்.
இவர் ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இவர் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்து இருவார காலகட்டத்திலேயே திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், திருநெல்வேலி தொகுதியில் சிம்லா முத்துச்சோழனுக்குப் பதில் ஜான்சிராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ள ஜான்சிராணி, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர் மற்றும் திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவராகவும் உள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.