
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கடந்த 15 செப். 2023 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25) முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் குறித்துப் பேசினார். மாதந்தோறும் ரூ. 1000 வழங்கக்கூடிய அந்த திட்டத்தில் 1.14 கோடி பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் விடுபட்டவர்கள் குறித்த செய்தியும் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. அது அரசின் கவனத்திற்கும் வந்துள்ளது. சட்டப்பேரவையிலும் அது குறித்துப் பேசியுள்ளார்கள். மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பணியை தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறோம்.
வரும் ஜூன் மாதம் நான்காம் கட்டமாக நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்கும் பணியைத் தொடங்கவுள்ளோம். 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் முறையாக அப்போது விண்ணப்பித்தால் விரைவில் வழங்கப்படும்’ என்றார்.