பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்: பாமக பொதுச்செயலாளர்

நேற்று முளைத்த காளான்கள் ராமதாஸை வசை பாடுவது தான் பேரவலம்
பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்: பாமக பொதுச்செயலாளர்
படம்: https://www.instagram.com/thilagabama/?hl=en
1 min read

ராமதாஸ் ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று விமர்சித்த பாமக பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் தெரிவித்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்னை நிலவி வருவது வெளிப்படையாக அனைவரும் அறிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருந்ததால், முரண்பாடு ஏற்பட்டதாகத் தகவல்கள் உண்டு. இருவருக்கும் இடையே பிரச்னை இருப்பதை உறுதிபடுத்தியது டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டம்.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்ட மேடையில், இளைஞரணித் தலைவர் நியமனத்தை முன்வைத்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் வெடித்தது. மேடையிலேயே இருவரும் காரசாரமாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 10 அன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றார்.

ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு பாமக பொருளாளர் திலகபாமா அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ராமதாஸ் எடுத்த இந்த முடிவு தவறு என்று திலகபாமா வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

ராமதாஸின் முடிவுக்கு எதிர்வினையாற்றிய அன்புமணி, " பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. எனவே, பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்" என்று தொண்டர்களுக்கு மடல் எழுதினார்.

இந்தப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. விரைவில் நல்ல செய்தி வரும் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தைலாபுரத்தில் நேற்று தெரிவித்தார். உள்கட்சிப் பிரச்னையை நாங்கள் பேசிக்கொள்வோம் என அன்புமணி செய்தியாளர்களிடத்தில் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்புடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"மாமனிதர் மருத்துவர் ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சில் வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். நெஞ்சில் கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாகக் கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது. நேற்று முளைத்த காளான்கள் ராமதாஸை வசை பாடுவது தான் பேரவலம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in