
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளதை அடுத்து, இது போன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்.22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.23) முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுவரை 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட தகவல் நமக்கெல்லாம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது.
நேற்றைய தினம் பஹல்காமின் பைசரன் மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
பயங்கரவாத, தீவிரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ள தகவல் எனக்குக் கிடைத்தவும், உடனடியாக தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்து, பத்திரமாக அழைத்துவர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுபோன்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய மண்ணில் இடமில்லை. அப்பாவி மக்கள் மீதான தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டிப்பதோடு நம் கடமை முடிந்துவிடவில்லை. இதுபோன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்து நிறுத்தவேண்டும்’ என்றார்.