

நம்மைப் படிக்க வைக்க இந்த அரசு நீண்ட காலமாகவே திட்டம் தீட்டி வருவதாக தமிழ்நாடு அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகம் உங்கள் கையில் என்னும் கருப்பொருளின் கீழ் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு முழுக்க இரு கட்டங்களாக நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மைய வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மாலை 3 மணியளவில் இந்த விழா நடைபெற்று வருகிறது. அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்கள். நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:
"முதல்வர், துணை முதல்வர், இங்கு வந்திருக்கக்கூடிய மற்ற எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகப் பெரிய சந்தோஷமும் பெருமையும் உள்ளது.
நான் வந்து அமர்ந்து அரைமணி நேரம் ஆனது. மூன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேள்விகளும் சந்தேகமும் கேட்கப்படுகிறது. அதற்குப் பொறுமையாகப் பதிலளிக்கிறார்கள். திட்டத்தில் பலன் பெற்றவர்கள் இங்கு வந்து பேசுகிறார்கள். இன்று 10 லட்சம் மடிக்கணினி கொடுக்கப்படவுள்ளன.
இந்த அரசு நீண்ட காலமாகவே நம்மைப் படிக்கவைக்க திட்டம் தீட்டி வருகிறது. இது தற்போது கிடையாது. நீண்ட வருடங்களாகவே நடந்துகொண்டு வருகிறது.
அடுத்த தலைமுறைக்கு வேறு எதையாவது கொடுப்பதற்குப் பதிலாகக் கல்வியைக் கொடுப்பது எவ்வளவு அவசியம் என்றால் ஒருவருக்குக் கல்வி கிடைப்பதன் மூலமாக, அந்தத் தலைமுறை, அந்தக் குடும்பம் — அவர்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார்கள். இதற்கு மிக முக்கியமான பங்கு, இந்த அரசு மறுபடியும் மறுபடியும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக மிக்க நன்றி சார் உங்களுக்கு.
ஏனென்றால், ஒருவருக்கு அவருடைய வளர்ச்சி என்பது அவருக்குக் கிடைக்கும் அறிவின் மூலமாகவே அவர் முன்னோக்கி செல்கிறார்கள். அதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து அவர்களை முன்னோக்கி நகர்த்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அதற்கு மிக்க நன்றி சார். இந்தத் திட்டத்தில் பலனடையும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார் விஜய் சேதுபதி.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் முன்பு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்தது.
The Government keeps planning to make sure we get an education,” says Vijay Sethupathi at the Tamil Nadu Government’s Laptop Distribution Scheme event.
| Tamil Nadu Government | Laptop Distribution Scheme | Laptop Scheme | MK Stalin | Udhayanidhi Stalin | Vijay Sethupathi | Tamil Nadu Laptop Distribution Scheme | Free Laptop Scheme Tamil Nadu | Tamil Nadu Education Schemes | DMK Government Schemes | Student Welfare Schemes Tamil Nadu | Government Schemes Tamil Nadu |