தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5:30 மணியுடன் கால அவகாசம் நிறைவடைகிறது.
தமிழகத்தில் 2025-க்கான தேர்வு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது. அதன்படி விண்ணப்பங்களை அனுப்ப கடந்த செப்டம்பர் 8 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும், அண்மையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்படி சுமார் 1.17 லட்சம் பேர் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடையாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வலைத்தளம் 3 மணி நேரத்திற்கு மேல் முடங்கியது. இதையடுத்து விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை இன்று (செப். 10) வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இன்று மாலை 5:30 மணியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைகிறது. மேலும், தகுதித் தேர்வு நவம்பர் 15, 16 ஆகிய இரு நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
TET Exams | TN Government | Teachers | Government Schools | Government aided schools |