
கடந்த 2024-25 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 48,344 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 14 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஏப்.22) சட்டப்பேரவையில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி, துறைரீதியான கொள்கை விளக்கக் குறிப்பை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் தொடர்பான தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதன்படி, 2023-24-ம் நிதியாண்டில் ரூ. 45,855 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய், 2024-25-ம் நிதியாண்டில் ரூ. 48,344 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், முந்தைய நிதியாண்டைவிட, கடந்த 2024-25 நிதியாண்டில், ரூ. 2,489 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. குறிப்பாக, அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலம் சிறப்புக் கட்டணமாக, தமிழக அரசுக்கு ரூ. 62.88 கோடியும், சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிப கழகத்திற்கு ரூ. 32.52 லட்சமும் வருவாயாகக் கிடைத்துள்ளது.