
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்.23) உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சோதனை நிறைவடைந்த பிறகு, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமம் வழங்கல், மதுபானங்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் ஆகியவற்றின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டது.
தமிழக அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரியும் டாஸ்மாக் நிர்வாகம், தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு முதலில் விசாரித்தது. ஒரு கட்டத்தில் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது வந்தது.
வழக்கு மீதான விசாரணை கடந்த ஏப்.21 அன்று நிறைவடைந்த நிலையில், இன்று (ஏப்.23) தீர்ப்பு வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமாக அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகவும், தமிழக அரசும் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் பொதுமக்களுக்கு எதிரானது என்பதால் மக்கள் நன்மைக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் தவறில்லை என்று இறுதி உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாகத்துறைக்கு அனுமதியளித்தனர்.