மக்களை ஏமாற்றும் தமிழக ஆட்சியாளர்கள்: விஜய்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று தமிழக மக்களை நம்பவைத்தார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்.
மக்களை ஏமாற்றும் தமிழக ஆட்சியாளர்கள்: விஜய்
1 min read

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என்று கூறிவிட்டு, தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனக் கூறி தமிழக மக்களை தற்போதைய ஆட்சியாளர்களை ஏமாற்றுவதாகக் கருத்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (ஜன.11) தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...’ என்ற பாடல் வரிகள் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.

தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம்.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்பவைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.

ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத்தான் உள்ளது, மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in