2023-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் விருதுகளுக்கு முறையே சுப. வீரபாண்டியன் மற்றும் பி. சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான விருது சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியரை வழங்கப்படவுள்ளது.
இதேபோல தமிழ் மொழிக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றுபவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு வழங்கப்படுகிறது. பத்தமடை பரமசிவம், பேரறிஞர் அண்ணா விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
2023-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது உ. பலராமனுக்கு வழங்கப்படவுள்ளது.
2023-ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழனி பாரதிக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் பாரதிதாசன் விருது ம. முத்தரசுக்கு வழங்கப்படுகிறது. பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதுக்குத் தேர்வாகியுள்ளார். முனைவர் இரா. கருணாநிதிக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளைப் பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ. 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவார்கள்.