
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் தமிழ்நாடு பெற்றுத்தரும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று (ஏப்.18) தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது,
`நீட் தேர்வில் விலக்கு அளிப்போம், ஹிந்தியை திணிக்கமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சரால் உறுதியளிக்க முடியுமா? தமிழ்நாட்டில் இவ்வளவு சிறப்பு நிதியை வழங்கியிருக்கிறோம் என்று பட்டியலிட முடியுமா? நாங்கள் செய்வது திசைதிருப்பல் என்றால் இதற்கெல்லாம் தெளிவான பதிலை ஏன் தமிழக மக்களுக்கு நீங்கள் வழங்கவில்லை?
சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்திற்குப் பிரதமர் வந்தார். எவ்வளவு (நிதி) கொடுத்தாலும் இங்கே அழுகிறார்கள் என்று அவர் பேசினார். மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநில அரசுகள் என்ன பிச்சைக்காரர்களா என்று குஜராத் முதல்வராக இருந்தபோது அவர் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் சொன்னார்.
நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை அல்ல, அது தமிழ்நாட்டின் உரிமை. உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று தலைவர் கற்றுக்கொடுத்திருக்கிறார்.
அதற்கு அடையாளமாக இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத வகையில் ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் மாநில சுயாட்சிக் குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவின் மூலம் அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நாங்கள் பெற்றுத்தருவோம்.
மாநிலங்கள் சுயாட்சியை பெற்றிருந்தால்தான் மக்களுக்குத் தேவையானவற்றை செய்துதரமுடியும். இதைத்தான் நான் சட்டப்பேரவையிலும் கூறினேன்’ என்றார்.