
தமிழ்நாட்டில் அடுத்த கல்வியாண்டு முதல் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் ஏஐ குறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புதிய பாடங்களைச் சேர்ப்பது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) ஆய்வு நடத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கத்தை உணர்ந்து இதைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் ஏஐ மட்டுமில்லாமல் கணினி அறிவியல் குறித்த அடிப்படைகள், மெஷின் லேர்னிங், கோடிங், ரோபோடிக்ஸ் உள்ளிட்டவற்றையும் பாடத்திட்டத்தில் இணைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பாடத்திட்டத்தில் இவை சேர்க்கப்படவுட்டன் ஆசிரியர்களுக்கும் இதுதொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதுதொடர்புடைய சரியான பாடத்திட்டத்தை வகுப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாடத்திட்டத்தில் ஏஐ சார்ந்த பாடங்கள் சேர்க்கப்படுவதன் மூலம், மாணவர்களால் ஏஐ செயலிகள் குறித்து புரிந்துகொள்வதற்கான பார்வையை விரிவுபடுத்த உதவும். அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கைக்கோர்த்த பள்ளிக் கல்வித் துறை 100 பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான 38 ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கும் வகையில் நவீன் தொழில்நுட்பங்கள் குறித்த கல்வியை மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.