
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால், அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றிய நயினார் நாகேந்திரன், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டுத் தேர்தல் அரசியலில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தார். வெறும் 722 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எல். சுப்பிரமணியனை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில், அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். 5 வருட ஆட்சிக்காலத்தில், போக்குவரத்துத் துறை, ஊரகத் தொழில்கள் துறை, எரிசக்தித் துறை, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளின் அமைச்சராக செயல்பட்டார்.
அதன்பிறகு, 2006 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2011 தேர்தலில் திருநெல்வேலியில் வெற்றிபெற்றிருந்தாலும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
2016 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லக்ஷ்மணனிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தார். 5 டிசம்பர் 2016 அன்று ஜெயலலிதா உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2017-ல் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு தென் மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், 1,27,122 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.யு.எம்.எல். வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வியடைந்தார்.
இரண்டு வருடங்கள் கழித்து நடைபெற்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்பே, திருநெல்வேலி தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து நயினார் நாகேந்திரன் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த தேர்தலில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சி. சரஸ்வதி (மொடக்குறிச்சி), எம்.ஆர். காந்தி (நாகர்கோவில்) என நான்கு பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றிபெற்றிருந்தாலும், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டார்.
அதன்பிறகு, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும், 2024 மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மேலும் இந்த தேர்தலில், தமிழகத்தின் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றிபெறவில்லை. இந்நிலையில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்வதாக கடந்த ஆண்டில் இருந்து செய்திகள் வெளிவந்தன.
இது தொடர்பாக கடந்த ஜனவரியில் கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், `கூட்டணி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகப் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். வருமான வரித்துறை சோதனை நடத்தித்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை’ என்றார்.
இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தில்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின.
அதன்பிறகு, தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, அவருக்குப் பதில், அதிமுகவில் பல வருடங்கள் செயல்பட்டு தமிழக அரசியலில் ஆழமான அனுபவம் பெற்றுள்ள நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்புக்கு கொண்டுவரப்படுவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு இன்று (ஏப்ரல் 11) நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்தார். எனவே, தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றித் தேர்வாவது உறுதியாகியுள்ளது. நாளை (ஏப்.12) 13-வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.