திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியால் ஜனநாயகத்தை எப்படி காக்க முடியும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார். நம்மாழ்வார்பேட்டை சந்தையில் ஒத்தவாடைத் தெருவிலிருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கியது. பிரசாரத்தின்போது இண்டியா கூட்டணியை எதிர்த்து விமர்சித்துப் பேசினார்.
"ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என காங்கிரஸ் பேசுகிறது. திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு காங்கிரஸால் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்க முடியும்?
கேரளத்தில் போட்டியிடும் காங்கிரஸ், பிஎஃப்ஐ போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. வயநாட்டில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் எதிர்த்துப் போட்டியிடுவதைப் பார்க்கிறேன். ஆனால், தில்லியில் பார்த்தால் அவர்கள் கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள்" என்றார் ஸ்மிருதி இரானி.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.