
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு இடம்பெற்றிருக்க வேண்டுமென்றால், தங்களுக்கு 25 எம்.பி.க்களை ஜெயித்துக் கொடுத்திருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் 69 சதவீதம் இடஒதுக்கீடு முறை தொடர வேண்டும் என்பதற்குத் தரவுகள் இருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். நிச்சயமாகத் தரவுகள் இல்லை. பழைய தரவுகள்தான் உள்ளன, புதிய தரவுகள் இல்லை.
முதல்வர் உடனடியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் அறிவிப்பது தவறானது. கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. தரவுகளை சேகரிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் இரு முறை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், மத்திய அரசுதான் கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்று முதல்வர் கூறுகிறார்.
மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பு முழுமை பெறாது. மாநில அரசு எடுக்கும் கணக்கெடுப்புதான் முழுமை பெறும். அதிகாரம் இருந்தும், கணக்கெடுப்பை நடத்தவில்லையென்றால், ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை. கருணாநிதி இருந்திருந்தால், தாமதப்படுத்தியிருக்க மாட்டார். உடனடியாகக் கையெழுத்து போட்டு கணக்கெடுப்பை நடத்தியிருப்பார். காரணம், அவருக்கு சமூக நீதி மீது அக்கறை இருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஆணையத் தலைவரைச் சந்திக்க வந்தோம். 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற வேண்டும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டைக் கொடுங்கள் என இவரிடமும் வலியுறுத்தியுள்ளோம்" என்றார் அன்புமணி.
தொடர்ந்து, பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி பதிலளித்ததாவது:
"இது மொத்தம் ரூ. 48 லட்சம் கோடி மதிப்புடைய பட்ஜெட். இதில் தமிழ்நாட்டுக்கு எதுவும் வந்திருக்காதா?. தமிழ்நாடு என்று பெயர் சொல்ல முடியாது. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் குறிப்பிட முடியாது. இது இந்தியாவுக்குப் பொதுவான பட்ஜெட்.
தமிழ்நாட்டுக்குக் கடந்தாண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் ரயில்வேயில் நிறைய நிதி வந்துள்ளது. இந்தியாவில் 100 தொழில் பூங்கா தொடங்கவிருக்கிறார்கள். இதில் தமிழ்நாடு வராதா..?
பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால், எங்களுக்கு 25 எம்.பி.க்களை ஜெயித்துக் கொடுத்திருக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற சொல் இடம்பெறாததற்கு இதுதான் காரணம் என்று சொல்லவில்லை. இயல்பாக சொல்கிறேன்.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி வந்திருக்கிறது என்பதை தெளிவாகக் கூறுகிறேன். தரவுகளை சேகரித்து வருகிறோம். தமிழ்நாட்டுக்கென்று தனித் திட்டங்கள் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. எனினும், தரவுகள் வந்தபிறகு தெளிவுபடுத்துகிறேன்" என்றார் அன்புமணி.