தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் 22 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.
இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை 7.72 லட்சம் மாணவர்கள், 9,191 தனித் தேர்வர்கள், 125 சிறைக் கைதிகள் என மொத்தம் 7.67 லட்சம் பேர் தேர்வெழுதினார்கள்.
இதன் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. தமிழ்நாட்டில் 94.56 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
தேர்வெழுதிய மாணவிகளில் 96.44 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். வழக்கம்போல மாணவர்கள், மாணவிகளைவிட குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்வெழுதியவர்களில் 92.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதமாகவும், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.7 சதவீதமாகவும் உள்ளன. 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளன.
97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 90.47 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடத்திலும் உள்ளன.