செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா: தமிழக அமைச்சரவை மாற்றம்!

மனோ தங்கராஜை அமைச்சரவையில் இணைக்க ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்.
செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா: தமிழக அமைச்சரவை மாற்றம்!
2 min read

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத் துறை அமைச்சர் பொன்முடி தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள்.

செந்தில் பாலாஜி ராஜினாமா ஏன்?

அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

2023-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதைத் தொடர்ந்து, 471 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார். பிணையில் வெளியே வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, பிணையில் வெளியே சென்றவுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கில் கடைசியாக ஏப்ரல் 23-ல் விசாரணை நடைபெற்றபோது, அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது பிணை வேண்டுமா? என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. மேலும், விசாரணை தாமதம் ஆனதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதாகவும் தகுதியின் அடிப்படையில் பிணை வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டியது. அமைச்சர் பதவியா? பிணையா? என்பதை முடிவு செய்ய செந்தில் பாலாஜிக்கு ஏப்ரல் 28 வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.

பொன்முடி ராஜினாமா ஏன்?

வனத் துறை அமைச்சர் பொன்முடி ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பெண்களையும் சைவம் மற்றும் வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய முறையில் பேசினார். இதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தார்.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டார். புதிய துணைப்பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டார். எனினும், அமைச்சர் பதவியிலிருந்தும் பொன்முடிய நீக்க வேண்டும் என திமுக அரசுக்கு விமர்சனங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், பொன்முடியும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம்

  • போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக செந்தில் பாலாஜியின் மின்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

  • செந்தில் பாலாஜி வகித்து வந்த மற்றொரு பொறுப்பான மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் கதர் துறை, பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம், பால்வளத் துறை காலியாக உள்ளது.

இதுதவிர பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜை அமைச்சரவையில் இணைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜினாமா, அமைச்சரவை இலாகா மாற்றம் மற்றும் மனோ தங்கராஜ் இணைப்புக்கான முதல்வரின் பரிந்துரை உள்ளிட்டவற்றை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக்கொண்டார். மனோ தங்கராஜின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. பால்வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in