
வருடாந்திர துணை வேந்தர்கள் மாநாடு உதகையில் நடைபெறவுள்ளதாக தமிழக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை இன்று (ஏப்.22) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் வருடாந்திர துணைவேந்தர்கள் மாநாடு உதகை ஆளுநர் மாளிகையில் வரும் ஏப்ரல் 25, 26-ல் தொடர்ச்சியாக 4-வது வருடமாக நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிப்பார்.
இந்த மாநாட்டின்போது, கற்பித்தல் முறையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒத்துழைப்புகளை மேற்கொள்வது, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, அறிவுசார் காப்புரிமை மூலம் வருமானத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இதன் அடிப்படையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தருக்கான அதிகாரத்தை ஆளுநருக்கு பதிலாக தமிழக அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களை அரசு நியமிப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய சட்டமசோதாக்கள் அமலுக்கு வந்தன.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன், ஏப்.16 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக் குழு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது.