
தமிழில் பெயர்ப்பலகை வைக்காத வணிக நிறுவனங்கள், மீது மே மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதி 15-ன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கவேண்டும். அதேபோல, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 1958 மற்றும் விதிகள் 1959-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதி 42(பி)-ன்படி தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து உணவு நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகைகளை வைத்திருக்கவேண்டும்.
மேலும், தொழிற்சாலைகள் சட்டம், 1948 மற்றும் விதிகள் 1950-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதி 113-ன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் தமிழில் பெயர் பலகை வைத்திருக்கவேண்டும்.
அத்துடன், பெயர்ப் பலகைகள் 5:3:2 என்ற விகிதாச்சாரத்தில் அமைக்கப்பட்டு, அதில் தமிழ் முதன்மையாக இருக்கவேண்டும். பிற மொழிகளில் பெயர் தேவைப்படும் பட்சத்தில் ஆங்கிலத்தில் இரண்டாவதாகவும், அதன்பிறகு பிற மொழிகளிலும் பெயரை வைத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், `தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. இதனை அவசியம் வணிகர்கள் பின்பற்ற வேண்டும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் வரும் மே 15-க்குள் தமிழில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காலக்கெடுவுக்குப் பிறகு தமிழில் பெயர்ப் பலகை அமைக்காத வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.