பொன்முடி பதவிப் பிரமாணம்: ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 11-ல் நிறுத்திவைத்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த சிறைத் தண்டனையை மட்டுமே உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், தீர்ப்பின் நகல் வெளியானவுடன் குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது உறுதியானது.

இதன்மூலம், பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது திரும்பப் பெறப்பட்டது. பொன்முடி மீண்டும் அமைச்சராவதிலும் எந்த சிக்கலும் இல்லை எனக் கூறப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். முதல்வர் கடிதம் எழுதிய மறுதினமே ஆளுநர் ஆர்.என். ரவி தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால், பொன்முடி அமைச்சராவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், பொன்முடி அமைச்சராகப் பதவியேற்றுக்கொள்வது கேள்விக்குள்ளானது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

இவற்றுக்கு மத்தியில் பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதில் பொன்முடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்முடியை உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிப்பதற்கான முதல்வரின் கோரிக்கையை ஏற்க ஆளுநர் மறுத்திருப்பது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 164(1)-ஐ அப்பட்டமாக மீறும் செயல் என தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in