சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.
சென்னை விமான நிலையத்தில் தொடங்கி பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக 13 புதிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் மெட்ரோ வழித்தடம் அமையும் வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு ரூ. 9,9335 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் நீளம் 15.4 கி.மீ.
இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேசமயம், இதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கானப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு தரப்பட்டுள்ளது.