தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தால் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு கடந்த ஆகஸ்ட் 30 அன்று புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலின் தற்போது இங்கிலாந்தில் உள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து இன்று உரையாற்றினார். ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், முதல்வரின் ஐரோப்பா பயணத்தில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
"முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஐரோப்பா சந்திப்புகளின்போது, இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரூ. 5,000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை ரூ. 176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவுள்ளது.
இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழ்நாடு முதல்வரின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால், தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு ரூ. 13,016 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், 17,813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MK Stalin | Tamil Nadu CM MK Stalin | MK Stalin Germany England | Investment |