காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொள்ளத் தொடங்கினார். சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரசார பயணத்தின்போது கிருஷ்ணசாமி வாண்டையாரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார் அண்ணாமலை.
இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய அண்ணாமலை, "கிருஷ்ணசாமி வாண்டையாரின் குடும்பம் பாரம்பரியம் மிக்க குடும்பம். காங்கிரஸ் கட்சியில் அவர் மூத்த தலைவர். தமிழ்நாட்டில் இவரது குடும்பத்துக்கென்று தனி மதிப்பு உண்டு. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான். இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது" என்றார்.
தஞ்சாவூரில் திமுக சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி, அண்ணாமலையைச் சந்தித்திருப்பது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.