
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் குப்பநத்தம் பகுதியில் வசித்து வந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த முருகேசனும், இடைநிலை சாதியைச் சேர்ந்த கண்ணகியும், கடந்த 2003-ல் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் அவரவர் வீடுகளில் தங்கள் திருமணத்தை மறைத்த நிலையில், ஒரு கட்டத்தில் பெண் வீட்டாருக்கு இது தெரியவந்து பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கண்ணகியை தனது உறவினர் வீட்டில் முருகேசன் தங்க வைத்துள்ளார்.
கண்ணகியைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அவரது வீட்டார் முருகேசனை முதலில் கடத்தி, அதன்பிறகு கண்ணகி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரையும் பிடித்து வந்துள்ளனர். பிறகு இருவருக்கும் வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து ஆணவக் கொலைசெய்து, உடல்களை வண்ணாங்குடிகாட்டிலுள்ள சுடுகாட்டில் தனித்தனியாக எரித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஆணவக்கொலை தொடர்பாக, அன்றைய விருதாச்சலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணை நிறைவடைந்த பிறகு இந்த வழக்கு தொடர்பான விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2021 செப்டம்பரில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கொலை செய்யப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, ஐயாசாமி, ரங்கசாமி , கந்தவேலு, ஜோதி வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புளி ராமதாஸ், சின்னதுரை உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மருதுபாண்டிக்கு மரண தண்டனையும், மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் மருதுபாண்டிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதுடன், கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கில் இன்று (ஏப்.28) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, கே. வினோத் சந்திரன் அமர்வு, குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.