
டாஸ்மாக் முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை சோதனைக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (மே 22) உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ஏறத்தாழ 60 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சோதனை நிறைவடைந்த பிறகு, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமம் வழங்கல், மதுபானங்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் ஆகியவற்றின் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை அறிவித்தது.
தமிழக அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரியும் டாஸ்மாக் நிர்வாகம், தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு முதலில் விசாரித்தது. ஒரு கட்டத்தில் விசாரணையில் இருந்து விலகுவதாக இந்த இரு நீதிபதிகள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது வந்தது.
வழக்குகள் மீதான இறுதிகட்ட விசாரணை கடந்த ஏப்.8 அன்று தொடங்கி ஏப்.21-ல் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஏப்.23-ல் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் பொதுமக்களுக்கு எதிரானது என்பதால் மக்கள் நன்மைக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் தவறில்லை என்று இறுதி உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாகத்துறைக்கு அனுமதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த மணப்பாக்கத்தின் சி.ஆர்.புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் இல்லத்தில் கடந்த மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அத்துடன், விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாகன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று (மே 22) விசாரணை நடத்திய நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த விசாரணையின்போது, `கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அமலாக்கத்துறை வரம்பை மீறி செயல்படுகிறது என்றும், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களை விசாரிக்கலாம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் எப்படி விசாரிக்க முயற்சிக்கலாம் என்றும்’ நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், தனிப்பட்ட விற்பனை நிலைய நிர்வாகிகள் மீது 41 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வாதங்களை முன்வைத்தது.