திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
2023 டிசம்பர் மாதத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கித் திவாரி இரண்டு முறை மனுத் தாக்கல் செய்திருந்தார். அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பிறகு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கோரி, அவர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதன் பிறகு இந்த வழக்கில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை வழங்கியுள்ளது.
மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆதாரங்களை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டை விட்டு அனுமதி பெறாமல் வெளியேறக் கூடாது என்றும், தேவைப்பட்டால் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.