தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி!

தேர்வு நிறைவடைந்த நாளில் இருந்து, சரியாகத் தேர்வெழுதவில்லை என்று பெற்றோரிடம் அடிக்கடி புலம்பியதாக கூறப்படுகிறது.
தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி!
1 min read

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், 413 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த புண்ணிய மூர்த்தி என்பவரின் மகளான ஆர்த்திகா, பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த நிலையில், நடந்து முடிந்த பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.

தேர்வு நிறைவடைந்த நாளில் இருந்து, சரியாகத் தேர்வெழுதவில்லை என்று பெற்றோரிடம் அடிக்கடி அவர் புலம்பியதாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்திலேயே இருந்துவந்த ஆர்த்திகா, வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, பாபநாசம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இன்று (மே 8) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில், தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 48 மதிப்பெண்கள், இயற்பியல் பாடத்தில் 65 மதிப்பெண்கள், வேதியியல் பாடத்தில் 78 மதிப்பெண்கள், விலங்கியல் பாடத்தில் 80 மதிப்பெண்கள், தாவரவியல் பாடத்தில் 70 மதிப்பெண்கள் என ஒட்டுமொத்தமாக 413 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் ஆர்த்திகா தேர்ச்சியடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in