
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் விவரங்களைப் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த டிச. 23-ல் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். விவரங்கள் இன்று (டிச.26) காலை வெளியாகின.
இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, `ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக அரசு. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடாகும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, ஆன்லைன் எஃப்.ஐ.ஆர். விவரங்களை யாரும் பார்க்க முடியாதபடி சென்னை காவல்துறையின் இணையதளத்தில் உள்ள வசதி தற்காலிகமாக முடக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். விவரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ, செய்திகளில் ஒளிபரப்பினாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.