மத்திய பட்ஜெட் பிரதமர் மோடியின் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் பீஹார், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் நலத்திட்டங்களுக்கும் வெள்ள நிவாரணத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் தமிழகத்துக்கென்று பிரத்யேகமாக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலினின் எக்ஸ் பதிவு:
“தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது.
அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.