
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு, தோழர் நல்லகண்ணுவின் பெயரைச் சூட்ட உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் மற்றும் அக்கட்சியின் அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா இன்று (டிச.26) கொண்டாடப்படுகிறது. சென்னை தி.நகரில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,
`ஒவ்வொரு ஆண்டும் அய்யா நல்லகண்ணு பிறந்தநாளில் இதே இடத்தில் நாம் கூடி வாழ்த்துவது உண்டு. பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. நம்மைப் பொறுத்தவரையில் இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்தது இல்லை.
அப்படிப்பட்ட சிறப்பான வாய்ப்பையும், அரிய வாய்ப்பையும் பெற்றிருக்கக்கூடிய நம்முடைய நல்லகண்ணு அவர்களை நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால், நான் வாழ்த்த வரவில்லை. வாழ்த்தைப் பெற வந்திருக்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாம், சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என்ற உணர்வோடு, இன்றைக்கு தமிழகத்தில் உங்கள் அன்போடும், ஆதரவோடும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கெல்லாம், உறுதுணையாக பக்கபலமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய அய்யா நல்லகண்ணு.
அமைதியாக, அடக்கமாக அதே நேரத்தில் ஆழமாக எதையும் சிந்தித்து வெளிப்படுத்தக்கூடியவர். அப்படிப்பட்டவரை உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்றார்.
மேலும், 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்ட நல்லகண்ணுவை போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, `தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு கட்டடம்’ எனப் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நல்லகண்ணுவின் நூறாவது பிறந்தநாள் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் நல்லக்கண்ணு அய்யாவின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம். எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, அவர் பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட தோழர் நல்லகண்ணு அய்யாவும் நூற்றாண்டு காண்கிறார். இயக்கமே உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம். தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது. தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்’ என்றார்.