டாஸ்மாக்கில் ஏதோ தவறு நடக்கிறது: உயர் நீதிமன்றம்
டாஸ்மாகில் ஏதோ தவறு நடப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அரசு நடத்தும் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் 7 ஆயிரம் மதுக்கடைகள் உள்ளன. இதில் நிதிமுறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை 2014 முதல் 2021 வரை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது, ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் முறைகேடு, சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள், பார் உரிமம் வழங்கியது என பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் மாயக்கண்ணன், முருகன் மற்றும் ராமசாமி ஆகியோர் ஊடகங்களிடம் பேசியதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். இவர்கள் மூவர் மீதான நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கூறுகையில், "கிடைத்துள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும்போது, ஒட்டுமொத்த டாஸ்மாக் அமைப்பில் ஏதோ தவறு நடக்கிறது தெரிகிறது." என்றார்.
இதனிடையே, டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதன்படி, அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.